Saturday, 23 April 2016

பஜகோவிந்தம்

கண்ணனை நாடிடு கண்ணனை நாடிடு
    கண்ணனை நாடிடு, அறிவிலா மனமே
காலன் வந்து கைதொழும் போது
    இலக்கண இலக்கியம் துணையிலை மனமே!
 
பெரும் பொருள் வேண்டி, சத்தியம் மறந்து
    இரவோடு பகலாய் மயங்குதல் ஏனோ?
கிடைத்ததே நன்று, செல்வம் இதன்று:
    கண்ணனின் அன்பை எண்ணுதல் நன்று... (கண்ணனை ….

மங்கையை கண்டு, காமத்தில் வெந்து
    இரத்தமும் சதையும் இன்பெனக் கொண்டு
மோகக் கடலில், மூழ்கி மூச்சிறைந்து
    கிடைத்திடாப் பிறவி வீழ்த்துதல் நன்றோ?       (கண்ணனை....

நிலையிலா வாழ்க்கை எண்ணிடு மனமே
    தாமரை இலையின்  நீர் த்துளிதானே!
நோயும், பகையும், ஆசையும் கர்வமும்
    காலனின் தூதாய் அழைத்திடுமாமே!    (கண்ணனை….

இளமையும் வனப்பும் செல்வமும் சேர,
    சுற்றமும் நடபும் பிள்ளையும் அருகே:
கால்கள் தளா;ந்து கண்கள் மயங்கி
    உடல் விழும்போது உறவுகள் எங்கோ?  (கண்ணனை....

என்புதோல் போர்த்திய எழில்மிகு பாண்டம்
   கண்டவரெல்லாம் களித்திடும் தோற்றம்
மூச்சு மறந்து பிணமென மயங்க
    கொண்டவள் தானும் அஞ்சிடுவாளே!    (கண்ணனை …

கூடி களிப்பில் குழந்தை மறந்தான்…
    போகக் களிப்பில் இளைஞன் நினையான்..
கழிந்தன எண்ணி முதுமையில் வாட,
    கண்ணனை எண்ணிட காலமெதாதோ?   (கண்ணனை ….

மனைவியும் யாரோ!   மக்களும் யாரோ!
    சுற்றமும் நட்பும் நீயுந்தான் யாரோ!
வந்தது எங்கே!  போவது எங்கோ?
    கானல்நீர் வாழ்வை நிலையென நினைந்தாய்…(கண்ணனை...

இரவும் பகலும் நிலையிலை மாறும்
    வசந்தம், கோடை வரும், இனி மாறும்
மாயவலையில் வீழ்ந்தவர் தமக்கு
    மாறா ஆசை, மறைவதும் கூடுமோ?   (கண்ணனை...

யௌவனம் மறைந்தால் மோகமும் யாது!
    வற்றிய குளத்தால் வரும்பயன் யாது!
நல்லவர் கூடி மாயை அறுந்தால்
    பந்தமகன்று ஞானமும் மலரும்!

கண்ணனை நாடிடு
   கண்ணனை நாடிடு
    கண்ணனை நாடிடு,
       அறிவிலா மனமே

No comments:

Post a Comment