Sunday, 3 August 2025

வீர சுதந்திரம் வேண்டி "

 வீர சுதந்திரம் வேண்டி "

தனத்தை தந்தவன்
சுகத்தை எறிந்தவன்
உயிருடன் தோலுரித்தும்
மார்பை நிமிர்த்தியவன்
வாழ்வை தொலைத்தவன்
தன்னையே தந்தவன்.....
சுதந்திரம் காணாது
உரமாகிப்போனவர்கள்
சரித்திரத்திலும்
காணாது போய்விட்டனர் !
அந்த,
உரத்தில் விளைந்த
காளான்கள்
வனத்தை அழித்த
விஷ விருக்ஷம்
தெருவுக்கு தெருவாய்
மூலை முடுக்கிலெலாம்
சிலையாய்
பல்கலையாய்
மணியாய்
மண்டபமாய்
மக்கள் பணத்தில்
மாக்கள்
கை காட்டி நிற்கின்றனர்
பிஞ்சு செடிகளெல்லாம்
நஞ்சு விதையுண்டு
நஞ்சாய் மாறி இன்று
சரித்திரம் அறியாது
தரித்திரராய்
உலவுகின்றார்
எங்கள் தமிழ்நாட்டிலே......
கத்தியின்றி ரத்தமின்றி
பெற்றதல்ல சுதந்திரம்
தியாகிகள்
ரத்தத்தால்
காய்ந்த காவியே
எங்கள் மண் .
மார் துளைத்த
குண்டுகள்,
துளைக்கவில்லை
வீரத்தை
குத்தி நின்ற ஈட்டிகள்,
குத்தவில்லை
தியாகத்தை
பாரத தாய் தேர் இழுக்க
செக்கிழுத்த செம்மல்
முகம் அறிய
தியாகியர்தம்
தியாகத்தால்
மலர்ந்த பூமி
வெள்ளையன் இட்ட
பிச்சையல்ல
சுதந்திரம்
இது
ஆயிரம் ஆயிரம்
இன்னுயிர் ஈந்து
பறித்த
மணிமகுடம்.
எங்கள் தமிழ் மண்ணிலும்
வீரமும் தியாகமும்
அழிந்து விடாது
மாய வலையில்
சிக்கிய சிம்மம் நாம்
வலை அறுக்கும்
காலம் வரும்
அரக்கர்கள் காலம்,
சாஸ்வதம் அல்ல
பாரதி,
"கண்ணீரால் காத்த"
இப்பயிர்
"கருக திருவுளம்"
வருவதில்லை.
- தனஞ்சயன்

Thursday, 24 July 2025

 தந்தையை நானறிவேன் 

பாட்டனை நானறிவேன் 

அதன் 

முந்தையர் யாரறிவார்!!


பிறந்தார்,

இருந்தார், 

மறைந்தார், 

இதுவே வாழ்க்கையெனில் 

தோற்றலின் பயனென்ன ?

செயற்றலின் பயனென்ன ?

வீழ்தலில் குறையென்ன ?      


புரிந்தும் புரியாத 

இருண்ட பகலிலே 

பகடை உருட்டுபவன் 

ஆட்டுகிறான்

ஆடுகின்றோம் 

வாழ்தலும் அவன் சித்தம் 

வீழ்தலும் அவன் சித்தம்  


இந்த 

ஒட்டாத

பழரசத்தை 

மேனியில் ஒட்டிவிட்டால்  

இரண்டிலும் இனிமையிலை

இரண்டிலும் துன்மையிலை 

ஓட்டும் வழியறியா 

அலைந்து ஓய்ந்துவிட்டேன்      

மற்றை பிறவியதில் 

விழித்தால் பிழைத்திடுவேன் 


             - தனஞ்சயன்  

Thursday, 3 July 2025

காட்டேரிகள் அதிகாரமென்றால்

போலீஸ்...
கையை உடைத்தது:
காலை உடைத்தது:
கஞ்சா வழக்கில்
சிக்க வைத்தது :
உயிரைப் பறித்தது:
இவையெல்லாம்
இனி செய்தியல்ல!
நமக்கு
சிறிது நாளில்
பழகி விடும்.
***
இது
நமக்கில்லை என்று
ஒதுங்கி விடுவோம்
நம் கால்
உடைபடும் வரை .
****
நாம்
மிருகங்கள் மத்தியில்
"வாழும்"
கோழை
மனிதர்கள்.
*****
பாண்டியன் நெடுஞ்செழியன்
மனுநீதி சோழன்
சிபி சக்ரவர்த்தி
பாரி மன்னன்
யாரும்
இங்குப் பிறக்கவில்லை
விஜயரகுநாத சேதுபதியும்,
அக்காள் மடம்
தங்கச்சி மடமும்
சரித்திரமாய் புனைந்த
கற்பனைக் கதைகள்...
******
நமது சரித்திரமும்
வீரமும்
நேர்மையும்
நமக்கு
தெரிவதில்லை.
இன்று
"அச்சிட்ட தாள்"
இருந்தால்
கொலைகளும்
நியாயமே.
அதிகாரம்
கையிலென்றால்
இரவிலும்
சூரியன் வரும்.
*****
அமாவாசையன்று
நிலவைக் காட்டிய
அபிராமி
இன்று
சூலத்துடன்
வரமாட்டாள்.
நாம்தான்
பணத்தை
சாப்பிட
பழகிவிட்டோமே!
யார்தான்
அவளை
நம்பி
அழைப்பர்.
******
உதிரம் குடிக்கும்
காட்டேரிகள்
அதிகாரமென்றால்
அங்கு
நல்லவன்தான் குற்றவாளி.

Saturday, 28 June 2025

ஜனனம் மரணத்தின் ஆரம்பம்.

ஜனனம் 

ஒரு துக்க சந்தோஷம் 

ஒரு முடிவின் 

துவக்கம்.


காலம் 

எப்போதும் 

கனிவாய்

இருப்பதில்லை. 


பூப்பதும் 

காய்ப்பதும் 

பழுத்து

உதிரத் தானே.     


ஒரு முடிவில் தானே 

ஒரு துவக்கமும் 

ஜனிக்கும்.


ஜனனம் 

மரணத்தின் 

ஆரம்பம்.  


மரணம் 

ஒரு 

இனிய 

சோகம்!


.... தனஞ்சயன் 

Sunday, 8 June 2025

ஞானத்தை விட்டுச்செல்

ஞானத்தை விட்டுச்செல்

அஞ்ஞானத்தையும் விட்டுச்செல்

இதழாய் விழுந்தது போல்

சருகும் பூஜ்யமாய் வீழட்டும்
....
புதிதாக துவங்கிவை
வரும் எச்சங்கள்
கடிதுழைத்து
அவற்றை அழகு படுத்தட்டும்
....
நல் எண்ணங்கள்
தொடர்ந்து பயணிக்கட்டும்
நம் பயணம்
முடிந்த பிறகும் கூட.
...
தலைமுறைகள் விழித்திருக்க
எஞ்சியதை விட்டுச்செல்
சந்ததிகள் சோம்பி
உண்டுறங்க விடவேண்டாம்
...
விதைகள் என்றும் அழிவதில்லை
விதைகளை விட்டுச்செல்
பூப்பதும் காய்ப்பதும்
வருங்கால உலகிற்காய்
....
உன் காலடியின் ஓசைகள்
சங்கீதமாய்
மங்கி மங்கி போனாலும்
மாய்ந்து போவதில்லை
....
பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு மூலையில்
உன் ஆலாபனைகள்
கவிபாடி தாலாட்டும்
- தனஞ்சயன்

Friday, 6 June 2025

முன் அழுத காரணம்தான்

 விழுந்தேன் வெளியொளியில்

ஒன்றும் புரியவில்லை: 

அழுதேன், அழுதேன் 

அணைக்கும் கரங்கள் அணைக்க, 

அழுகை மறந்தேன்: 

மீண்டும் அழும்வரை...


கவிழ்ந்தேன், ஊர்ந்தேன், 

நடை தத்தி நடந்தேன்,     

கவலை ஏதுமில்லை: 

ஆயினும் அழுதேன் ஏனோ, ஏனோ ??

அணைப்பார் அணைத்தவுடன்,    

விழித்தேன், சிரித்தேன்.


ஓடினேன், ஆடினேன், 

வெளியிலே களிப்புடன், 

தேடினேன், திமிறினேன், 

அடங்கா காளையாய், ஆனால்..          

உள்ளிலே அழுதது 

வெளியெவரும் அறிவரோ..


கையிலும் காலிலும் 

கட்டுடன் சிரித்தேன். 

நான் தேடி கட்டுண்ட 

பொன் விலங்கு மங்குமுன் 

அழுவதா சிரிப்பதா 

தெரியாமல் நான் சிரித்தேன். 


இரண்டு மூன்றாக 

அமிர்தம் உண்டதுபோல் 

கண்குளிர காதலித்தேன். 

மூன்றும் நான்கும் வளர்ந்தபின் 

இணைசேர்க்க விழிபிதுங்கி 

மங்கலத்தில் விழிதிறந்தேன்.


நரை விழுந்து 

கண் மறைத்து 

நரம்புகளும் துணை தேட 

வேர்களையும் காணவில்லை, அங்கு 

விழுதுகளும்  காணவில்லை. 

வேரற்ற கொடி வீழ்ந்தேன்    


கூடிய கூட்டமெல்லாம் 

புகழ் மாலை, பூமாலை 

முன் செல்ல, கடல் தொடர 

நித்திரையில் யோசித்தேன் 

முன் அழுத காரணம்தான் 

முழுதாக புரிந்ததுவே!       


     .  தனஞ்சயன்

Monday, 26 May 2025

சிதடனாய் மாற்றிவிடு

 கண்கள் கலங்கவில்லை !!

கண்ணில் இனி ஈரமில்லை... 


இது காட்சியா 

         அல்ல நமது வீழ்ச்சியா??


இருப்பவர் சுவைத்து போக 

எஞ்சிய அமிர்தம் என 

பசித்தவர் எடுத்துப்போக 

பிஞ்சதன் நெஞ்சம் 

இங்கு கெஞ்சிடும் 

           காட்சி என்ன::: 


ஊனில் துளையெடுத்து 

உதிரம் தனை குடித்து 

துடியாய் துடிப்பதுபோல் 

நெஞ்சம் துடிப்பதென்ன 

கண்கள் மறைப்பதென்ன 


இதுவும் 

உன் விளையாட்டென்றால்     

இறைவா நிறுத்திவிடு

இல்லை 

எனை     

சிதடனாய் மாற்றிவிடு 

   - தனஞ்சயன்