Saturday, 28 June 2025

ஜனனம் மரணத்தின் ஆரம்பம்.

ஜனனம் 

ஒரு துக்க சந்தோஷம் 

ஒரு முடிவின் 

துவக்கம்.


காலம் 

எப்போதும் 

கனிவாய்

இருப்பதில்லை. 


பூப்பதும் 

காய்ப்பதும் 

பழுத்து

உதிரத் தானே.     


ஒரு முடிவில் தானே 

ஒரு துவக்கமும் 

ஜனிக்கும்.


ஜனனம் 

மரணத்தின் 

ஆரம்பம்.  


மரணம் 

ஒரு 

இனிய 

சோகம்!


.... தனஞ்சயன் 

Sunday, 8 June 2025

ஞானத்தை விட்டுச்செல்

ஞானத்தை விட்டுச்செல்

அஞ்ஞானத்தையும் விட்டுச்செல்

இதழாய் விழுந்தது போல்

சருகும் பூஜ்யமாய் வீழட்டும்
....
புதிதாக துவங்கிவை
வரும் எச்சங்கள்
கடிதுழைத்து
அவற்றை அழகு படுத்தட்டும்
....
நல் எண்ணங்கள்
தொடர்ந்து பயணிக்கட்டும்
நம் பயணம்
முடிந்த பிறகும் கூட.
...
தலைமுறைகள் விழித்திருக்க
எஞ்சியதை விட்டுச்செல்
சந்ததிகள் சோம்பி
உண்டுறங்க விடவேண்டாம்
...
விதைகள் என்றும் அழிவதில்லை
விதைகளை விட்டுச்செல்
பூப்பதும் காய்ப்பதும்
வருங்கால உலகிற்காய்
....
உன் காலடியின் ஓசைகள்
சங்கீதமாய்
மங்கி மங்கி போனாலும்
மாய்ந்து போவதில்லை
....
பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு மூலையில்
உன் ஆலாபனைகள்
கவிபாடி தாலாட்டும்
- தனஞ்சயன்

Friday, 6 June 2025

முன் அழுத காரணம்தான்

 விழுந்தேன் வெளியொளியில்

ஒன்றும் புரியவில்லை: 

அழுதேன், அழுதேன் 

அணைக்கும் கரங்கள் அணைக்க, 

அழுகை மறந்தேன்: 

மீண்டும் அழும்வரை...


கவிழ்ந்தேன், ஊர்ந்தேன், 

நடை தத்தி நடந்தேன்,     

கவலை ஏதுமில்லை: 

ஆயினும் அழுதேன் ஏனோ, ஏனோ ??

அணைப்பார் அணைத்தவுடன்,    

விழித்தேன், சிரித்தேன்.


ஓடினேன், ஆடினேன், 

வெளியிலே களிப்புடன், 

தேடினேன், திமிறினேன், 

அடங்கா காளையாய், ஆனால்..          

உள்ளிலே அழுதது 

வெளியெவரும் அறிவரோ..


கையிலும் காலிலும் 

கட்டுடன் சிரித்தேன். 

நான் தேடி கட்டுண்ட 

பொன் விலங்கு மங்குமுன் 

அழுவதா சிரிப்பதா 

தெரியாமல் நான் சிரித்தேன். 


இரண்டு மூன்றாக 

அமிர்தம் உண்டதுபோல் 

கண்குளிர காதலித்தேன். 

மூன்றும் நான்கும் வளர்ந்தபின் 

இணைசேர்க்க விழிபிதுங்கி 

மங்கலத்தில் விழிதிறந்தேன்.


நரை விழுந்து 

கண் மறைத்து 

நரம்புகளும் துணை தேட 

வேர்களையும் காணவில்லை, அங்கு 

விழுதுகளும்  காணவில்லை. 

வேரற்ற கொடி வீழ்ந்தேன்    


கூடிய கூட்டமெல்லாம் 

புகழ் மாலை, பூமாலை 

முன் செல்ல, கடல் தொடர 

நித்திரையில் யோசித்தேன் 

முன் அழுத காரணம்தான் 

முழுதாக புரிந்ததுவே!       


     .  தனஞ்சயன்