Thursday, 24 July 2025

 தந்தையை நானறிவேன் 

பாட்டனை நானறிவேன் 

அதன் 

முந்தையர் யாரறிவார்!!


பிறந்தார்,

இருந்தார், 

மறைந்தார், 

இதுவே வாழ்க்கையெனில் 

தோற்றலின் பயனென்ன ?

செயற்றலின் பயனென்ன ?

வீழ்தலில் குறையென்ன ?      


புரிந்தும் புரியாத 

இருண்ட பகலிலே 

பகடை உருட்டுபவன் 

ஆட்டுகிறான்

ஆடுகின்றோம் 

வாழ்தலும் அவன் சித்தம் 

வீழ்தலும் அவன் சித்தம்  


இந்த 

ஒட்டாத

பழரசத்தை 

மேனியில் ஒட்டிவிட்டால்  

இரண்டிலும் இனிமையிலை

இரண்டிலும் துன்மையிலை 

ஓட்டும் வழியறியா 

அலைந்து ஓய்ந்துவிட்டேன்      

மற்றை பிறவியதில் 

விழித்தால் பிழைத்திடுவேன் 


             - தனஞ்சயன்  

Thursday, 3 July 2025

காட்டேரிகள் அதிகாரமென்றால்

போலீஸ்...
கையை உடைத்தது:
காலை உடைத்தது:
கஞ்சா வழக்கில்
சிக்க வைத்தது :
உயிரைப் பறித்தது:
இவையெல்லாம்
இனி செய்தியல்ல!
நமக்கு
சிறிது நாளில்
பழகி விடும்.
***
இது
நமக்கில்லை என்று
ஒதுங்கி விடுவோம்
நம் கால்
உடைபடும் வரை .
****
நாம்
மிருகங்கள் மத்தியில்
"வாழும்"
கோழை
மனிதர்கள்.
*****
பாண்டியன் நெடுஞ்செழியன்
மனுநீதி சோழன்
சிபி சக்ரவர்த்தி
பாரி மன்னன்
யாரும்
இங்குப் பிறக்கவில்லை
விஜயரகுநாத சேதுபதியும்,
அக்காள் மடம்
தங்கச்சி மடமும்
சரித்திரமாய் புனைந்த
கற்பனைக் கதைகள்...
******
நமது சரித்திரமும்
வீரமும்
நேர்மையும்
நமக்கு
தெரிவதில்லை.
இன்று
"அச்சிட்ட தாள்"
இருந்தால்
கொலைகளும்
நியாயமே.
அதிகாரம்
கையிலென்றால்
இரவிலும்
சூரியன் வரும்.
*****
அமாவாசையன்று
நிலவைக் காட்டிய
அபிராமி
இன்று
சூலத்துடன்
வரமாட்டாள்.
நாம்தான்
பணத்தை
சாப்பிட
பழகிவிட்டோமே!
யார்தான்
அவளை
நம்பி
அழைப்பர்.
******
உதிரம் குடிக்கும்
காட்டேரிகள்
அதிகாரமென்றால்
அங்கு
நல்லவன்தான் குற்றவாளி.