ஆண்டுகள் பல கடந்தும்
மாறாத நினைவலைகள்..பாசத்தை உரையினிலே கேட்டதில்லை எந்நாளும்
கண்ணெதிரே உறவினிடம் புகழ்ந்ததில்லை என் பெருமை
அன்பாக அணைத்ததுவோ நினைவாக எதுவுமில்லை..
என்றோ ஒருநாள் வெளி உணவு விருந்தோம்பல்
இன்று போல் outing இல்லை
வானினிலே பறந்ததில்லை,
தவம் கிடந்தால் மகிழுந்து வரம் கிடைக்கும்
ஆடம்பரம் எதுவுமில்லை, வீண் செலவும் செய்ததில்லை
நினைத்ததெல்லாம் கிடைத்ததில்லை
ஆனால்
என் முகம் வாட, நொடிப்பொழுதில்
அவர் முகமொடு உடல் பதைக்க
முன்கோப முகத்திற்குள் மறைந்திருக்கும்
பாசமழை மௌனமாய் மடைதிறக்கும்
சனகாதி முனிவரவர் அனுபவித்த ஆன்ம சுகம்
அடையாளம் காட்டாமல் உள் நிறைக்கும்
காலங்கள் கரைந்தாலும்
மறைவதில்லை மௌனமொழி
ஊனோடு உயிர் பிரியும் வேளைவரை
மறப்பதில்லை தந்தைமொழி.