Tuesday, 25 July 2023

அகம் ப்ரஹ்மம்

 அகம் ப்ரஹ்மம் என்றார் :

நீயே அதுவென்றார் :
நானே அதுவென்றால்???

அதனினின் என்னை
எடுத்தபின் அது என்ன...
அது அதுவா, இல்லை குறைவா?

அதில் நான் சேர்ந்தபின்
அது அதுவா
இல்லை அது மிகுமா??

மிகுதலும் இல்லை !
குறைதலும் இல்லை !
அது புதிரா??

விடை காணா
புதிரிலே நானும்
அவிழாத ஒரு முடிச்சா??

ஆதிக்கே ஆதி
அதுவே ஆதியென்றால்
அதற்கு முன்??

அதற்கு முன்
இல்லையென்றால்
அதற்கு பின்??

வெற்றிடமே அதுவானால்
வெற்றிடமாய் அதுவாமோ???

வெற்றிடத்தில் நானும்
கரைந்து பின் ??

பூரணம் தான் வெற்றிடமோ
வெற்றிடம்தான் பூரணமோ??

கணிதங்கள் தோற்றுவிடும்
கற்பனைகள் பேதலிக்கும்
உணராத உணர்வதனை
உணர்வதுதான் எக்காலம்??

--- தனஞ்சயன்   

Friday, 21 July 2023

ஒரு துளி அண்டமாய் விரியும்

 புவனம் பெரிது

ககனம் பெரிது பெரிது

அண்டம் அதனில் பெரிது

ப்ரஹ்மம் அளவில் கூடா

 

எனினும் அதனில்

ஒரு துளி

அகம் எனும்   

அடங்காப் பேரொளி

 

ஒரு துளி

அண்டமாய் விரியும்

வழி நோக்கி

இரு விழிகள்….                    

Friday, 14 July 2023

வசந்தமினி வாராது

 ஆடி அமாவாசை

வாராது இனி மீண்டும் 

     வசந்தமினி வாராது 

தாய் வயிற்றில் மிதந்திருந்த 

     இதங்கள் இனி வாராது: 

வெயிலுக்கும் குளிருக்கும் 

     போர்வையின்றி சுகித்திருந்த… 

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது

 

பசுயுமில்லை ருசியுமில்லை, 

   தூக்கமில்லை விழிப்புமில்லை, 

உதிரத்தை பகிர்ந்தளித்த 

   பானைக்குள் கண்மூடி 

நித்திரையில் பத்திரமாய் 

   நீந்தி விளையாடிநின்ற….

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது 

 

கண்ணென்றும் மணியென்றும் 

    நாற்கரங்கள் சுமப்பதில்லை! 

ஓடினால் விழுவெனென்று       

   துரத்தும் விழி வாராது! 

முகம் வாட நீர்பெருக்கும் 

    சால்கள் எங்கு மறைந்ததுவே

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது

 

தோல்விபயம்  துளைத்தெடுக்க 

   தோள்கொடுத்து தாங்கி நின்ற, 

தோள்கள் இனி தாங்காது 

   மண்புதைந்து மாய்ந்ததுவே 

அன்னையும் தந்தையும் 

   மறைந்தபின் இவ்வுலகில் 

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது

Thursday, 13 July 2023

குறைதீர்க்கும் பாரிஜாதம்!

 மலருகின்ற மலருக்கு

    மணமெதுவும் தெரிவதில்லை.

தான் கொண்ட தேன் சுவையும்

    ஒரு கணமும் அறிந்ததில்லை.

மனமயக்கும்  நிறமழகும்

   மனதிலே இனித்ததில்லை.

காணுலகை வானுலகாய்

   மாற்றுகின்ற மாமலரே…

உன் சுகங்கள் உனக்கில்லை

   உலகிற்கே தந்தளித்தாய்!

 

வண்டு வரும், தேன் சுவைக்கும்

   வலி உனக்கு, தேன் எவர்க்கோ?

தென்றலது சுகந்தமாகும்..

  வழியெங்கும் மணம் பரப்பும் ..

முட்கூட்ட  பெரும் கடலில்

  முளைத்து நிற்கும் தேன்மலரே..

சுட்டெரிக்கும் பானுமுன்னே

  புன்னகைக்கும் மர்மம் என்ன!

உன் சுகங்கள் உனக்கில்லை

   உலகிற்கே தந்தளித்தாய்!

 

கானகத்து காரிருளில்

  கண் காண மலர்ந்துவிட்டு

ஊன் அடங்கி ஒடுங்கிவிடும்

  வீண் மலரும் நீயோஅல்ல.

ஊரெங்கும் ஒளிபரப்பி

  துயரறுக்கும் பேரொளியே

துயரெல்லாம் உனக்குள்ளே

  தெரியாமல் புதைத்துவிட்டாய்.

உன் சுகங்கள் உனக்கில்லை

   உலகிற்கே தந்தளித்தாய்!

 

உயிர் துறக்கும் வேளையிலும்

  ஈந்து நின்ற கர்ணனை போல்,

தன் உதிரம் தான் தந்து   

  மாயனையே ஏந்த வைத்தாய்.

கார்மேக வண்ணனவன்

  ஏழுலக குழல் மணக்கும்

குறையில்லா மகிழம்பூ .. நீ

  குறைதீர்க்கும் பாரிஜாதம்!

மறைந்தாலும் வாழ்ந்திருப்பாய்

    மாயனுடன் கலந்துவிட்டாய். 

 

                           ---- தனஞ்சயன்