Friday, 11 October 2024

The last Tree

 அது ஒரு விதையின் முழு பரிமாணம் 

புவிப்பிளந்து நெடிதுயரும் கனிதருவாம். 


வேருக்கு நீரூற்ற யாருமில்லை: 

உரம் வைத்து உடல் வளர்க்கும் பேறுமில்லை:


வான் வளத்தால் பூமாதின் பால் குடித்து, 

பானுதரு கிரணங்கள் இலையால் தாங்கி,


எவர் தயவும் இல்லாமல் நான் வளர்ந்தேன்: 

காயாகி கனியாகி தளிர்த்து நின்றேன்:   


காயானால் கல்லடிகள் மேனியெங்கும்... 

தளிரானால் கூரரிவாள் கீறிவைக்கும்: 


விளம்பரங்கள் உடல் துளைத்து மேனியெங்கும் 

ஊசிமுனை வதைகளுக்கோ உடலெடுத்தேன்


பட்டைகளை கழற்றிவிட்டால் பட்டமரம் 

பட்டறையில் உருமாறும் விதவிதமாய்     


மிச்சமும் விடவில்லை எச்சமும் விடவில்லை 

வனமெல்லாம் கட்டிட சுடு காடு ஆச்சே..    


நான் இருந்தேன் நான் மறைந்தேன் பாவமில்லை 

இனி நீ இருக்க இடம் உண்டோ இப்புவியில் ?  

உயிர் ஜனிக்க ஏதுமினி மிச்சமுண்டோ ?

உயிரை சமைத்து உண்டபின், மனிதம் எது?