Tuesday, 17 January 2023

விதி உனக்கு, வேறு வழியில்லை!

 கண்ணா ....


அறிவேன் நான் அறிவேன்.. 

எனை அறிவேன் நினை அறிவேன். 


முடைமுடையாய் பாவங்கள் 

உள்ளும் புறமுமாய், 

நிறைநிறையாய்  கொண்டுள்ள  

கீழினும் கீழானேன்!


உன் குழலோசை மட்டும் என் 

செவிகளில் பாய்ந்துவர, 

ஏனிந்த கங்கை, என் 

ஊனக்கண் கரைகளிலே!

 

அறிகிலேன் நான் அறிகிலேன்,

உன் ஒடக்குழல் மாயம் நான் அறிகிலேன்! 


மாயவனே கேட்கிறேன் நான்... 

அருள்வது உன் கடனே... 

பெறுவது நான், உன் அடிமை.  

விதி உனக்கு, வழியில்லை!     


உன் படியாய் கிடந்துழலும் 

பேறெனக்கு தகுதில்லை... 

மலராகி நின் மேனி அலங்கரிக்க,

தூயவனும் நானில்லை! 


புரிந்தது, எனில் புரிந்தது... 

உன் தத்துவம் இனி புரிந்தது. 


உன் தோகையின் ஸ்பரிசங்கள் 

என் மேனி வருடிவரும்.... 

உன் நாதங்கள் செவியிலே

முடிவிலா இசை ஒலிக்கும்.


யானைக்கும் மோட்சமுண்டு...

ததி பாணடன் பானைக்கும்   

கதி மோட்சம் உண்டென்றால்... 

அசுரரிபு! சம்காரம் முக்தியன்றோ? 


கண்ணா.... 


என் மெய் தீண்டி உன் பதங்கள்    

என் சிரஸில் நீ ஏற்றிடுவாய்! 

பாதாள லோகமென 

பாய்ந்தாலும், என் காவலன் நீ! 


விதி உனக்கு, வேறு வழியில்லை!  

Thursday, 12 January 2023

....யான் யார்? நானா ??....

 ....யான் யார்? நானா ??.....



யான் யார்? நானா ??
நேற்றிருந்த நான் இன்றெங்கே??
இன்றைய யான் நாளை யுண்டா??

நாளை, நான் கொண்ட ஊனில், யான் இல்லையெனில்
நான் என்ற யான், எங்கே மறைவேன்
ஊனை நான் என்று நித்தம் மயங்கி பின்
ஊன் நானில்லை என வீழ்ந்து கிடப்பதென்ன!

யான் ஆக நின்ற நான் பிணமாக மாய்ந்தபின்
நான் எங்கு செல்வேன், இன்று நான் எங்கு உள்ளேன் ?
நான் யான் ஆகும் முன்னே, யாராகினேன்?
நான் நீறு ஆன பின்னே யாராகுவேன்?

நான் அன்று வெற்றிடமா...
இல்லை அண்ட புதைகுழியா
நான் மீண்டும் வருவேனா?, இல்லை
மீளா பெருங்குழியாய் மறைவேனா?

எந்தையும் தாயும் சென்றவிடம் செல்வேனோ !
இல்லை கானகத்து காரிருள் தானாகி தவிப்பேனோ ?
செய்த பயன் செலவழிக்க மீண்டும் நான் பிறப்பேனோ?
புல்லாயா, புளுவாயா, மிருகமாயா ??

பிறந்ததுவே இறப்பதற்கு ... பின் பிறப்பெதற்கு??
அடைந்ததுவே விடுவதற்கு... பின் வாழ்வெதற்கு ??
நடந்ததெலாம் விழுவதற்கு.. பின் நடையெதற்கு ??
சுற்றமெலாம் மறைவதற்கு... பின் நினைவெதற்கு??

புரியாத தத்துவத்தில் யானாக வாழுகின்றேன்
யான் யார் என்று அறியுங்கால்,
நான் அன்று மாய்ந்திடுவேன்
நான் மாய்ந்து யான் அறிவேனோ ? இல்லை
நானும் யானும் செர்ந்தழிவேனோ??


மாயமதை யாரறிவார்!!

- dhananjayan