விழுந்தேன் வெளியொளியில்
ஒன்றும் புரியவில்லை:
அழுதேன், அழுதேன்
அணைக்கும் கரங்கள் அணைக்க,
அழுகை மறந்தேன்:
மீண்டும் அழும்வரை...
கவிழ்ந்தேன், ஊர்ந்தேன்,
நடை தத்தி நடந்தேன்,
கவலை ஏதுமில்லை:
ஆயினும் அழுதேன் ஏனோ, ஏனோ ??
அணைப்பார் அணைத்தவுடன்,
விழித்தேன், சிரித்தேன்.
ஓடினேன், ஆடினேன்,
வெளியிலே களிப்புடன்,
தேடினேன், திமிறினேன்,
அடங்கா காளையாய், ஆனால்..
உள்ளிலே அழுதது
வெளியெவரும் அறிவரோ..
கையிலும் காலிலும்
கட்டுடன் சிரித்தேன்.
நான் தேடி கட்டுண்ட
பொன் விலங்கு மங்குமுன்
அழுவதா சிரிப்பதா
தெரியாமல் நான் சிரித்தேன்.
இரண்டு மூன்றாக
அமிர்தம் உண்டதுபோல்
கண்குளிர காதலித்தேன்.
மூன்றும் நான்கும் வளர்ந்தபின்
இணைசேர்க்க விழிபிதுங்கி
மங்கலத்தில் விழிதிறந்தேன்.
நரை விழுந்து
கண் மறைத்து
நரம்புகளும் துணை தேட
வேர்களையும் காணவில்லை, அங்கு
விழுதுகளும் காணவில்லை.
வேரற்ற கொடி வீழ்ந்தேன்
கூடிய கூட்டமெல்லாம்
புகழ் மாலை, பூமாலை
முன் செல்ல, கடல் தொடர
நித்திரையில் யோசித்தேன்
முன் அழுத காரணம்தான்
முழுதாக புரிந்ததுவே!
. தனஞ்சயன்
No comments:
Post a Comment