Sunday, 10 April 2022

தச்சன் செய்த சிறுமா வையம்

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்

ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல

உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்

பொய்கை யூரன் கேண்மை

செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.

--- தும்பிசேர்கீரன் , குறுந்தொகை.

தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில், ஏறிச் செலுத்தி இன்பமடையாவிட்டாலும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப்போல, தலைவனோடு கூடி இன்பமடையாவிட்டாலும், நல்ல தேர்களையும், பொய்கையையுமுடைய மருதநிலத் தலைவனது நட்பினால் இன்பமடைந்தோம். அதனால். தலைவியின் வளையல்கள் கழலாமல் உள்ளன.

இது பொதுவாக சொல்கின்ற பொருள் .

இந்த விளக்கங்கள் சங்க நூல்கள் வெறும் காமத்தை முன்னிறுத்தியே எழுதப்பட்டது போல் விளக்குகின்றன.

சற்று மாற்றி பொருள் கொள்வோமா! …………..

கண்டலன் நான் உனை வெறும் கண்ணினால்,
கொண்டலன் நான் உனை இரு கரத்தினால்,
தேரினில் வலம் வரும் மாயனே,
தேரினுள் நான் இலன், உண்மையே !
தச்சன் தேரினை இழுத்திடும் சிறுவர் போல்
மாயாதேரினில் நான் உளேன் மனத்துளே
நீ, கூடியே இருப்பதால் துயருறேன்
தேய்வதில் என் இரு கரங்களே!
மாயனே யார் உனைக் கண்டவர் ?
அகத்தினுள் கண்டதால் வேண்டிலேன்:
வேண்டிலேன் என்றுமே, உண்மையே,
என் புறக்கண்ணில் உன்னுரு தோன்றவே !
- தனஞ்சயன்.

No comments:

Post a Comment