காளமேகம்
ஆசுகவி… அதாவது, சூல் கொண்ட மேகம் போல் நினைத்த நேரத்தில் கவிதை மழை பொழிபவன்.
பதினைந்தாம் நூற்றாண்டில் மதுரை அருகே திருமுகூரிலே பிறந்தவர். வரதன் அவர் இயற்பெயர்.
தஞ்சையை ஆண்ட சிற்றரசன் திருமலைராயன். தமிழில் தன்னை மறந்தவன்.
அறுபது நான்கு தமிழ் புலவர்களை தனக்கு நிகராக மரியாதை செய்து, சகல வசதிகளையும் செய்துகொடுத்தான். செல்வத்தினால் புலவர்களின் செருக்கும் உயர்ந்தது.
காணுங்கால் இந்த புலவர்களை கட்டியம் கூறி மரியாதையை செலுத்துவது வழக்கம். புலவர்களில் தலைமை புலவர் அதிமதுரகவி.
தமிழை போற்றும் மன்னனை காண என்று வந்த காளமேகத்திற்கு இந்த செருக்கு கசந்தது. புலவர்களை சற்றும் சட்டை செய்யாமல் நடந்தான். புலவர் கூட்டம் உடன் வந்த காவலர்கள் அதிமதுரகவிக்கு மரியாதை செய்ய வற்புறுத்தினர்.
பாய்ந்து வந்தது மேகத்திடமிருந்து மழை,
" அதிமதுரம் என்றே அகிலம் அறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும் - புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு "
அதிமதுரம் காட்டில் கிடைக்கின்ற ஒரு மருந்து . இதை ஏன் பல்லக்கில் தூக்கி துதிபாடி வீதியுலா செல்ல வேண்டும் என்று ஏளனமாகக் கேட்டான் காளமேகம்.
அந்த புலவர்களை தெய்வங்களாக பார்த்த மன்னனுக்கோ அது பிடிக்கவில்லை. அரசவைக்கு அழைத்தான் . அமர ஆசனம் கொடுக்கவில்லை.
தனக்கு ஞானம் கொடுத்த கலைமகளை துதித்தான். அரசனுக்கு பக்கத்தில் மற்றொரு ஆசனம் வந்தது. அதில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு தமிழ் மேகம் பாடியது.
" வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடென்னைச்
சரியாசனம் வைத்த தாய்."
காளமேகம் தொடர்ந்து அந்த புலவர்களை பார்த்துக் கேட்டான், " நீங்களெல்லாம் யார்"
"நாங்கள் கவிராஜர்கள் " ( கவி என்றால் இன்னொரு பொருள் குரங்கு )
அப்படியென்றால் ….
"வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக்கால்."
மன்னனின் முகம் சினத்தால் சிவந்தது... " நீர் யார் " கோபக் கனல் தெறிக்க கேட்டான்..
“தூதஞ்சு நாளிகையில் ஆறுநாளிகைதனில்
சொற்சந்த மாலை சொல்லத்
துகளிலா வந்தாதி யேழுநாளிகை தனில்
தொகைபட விரித்து ரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ளிகைதனில்
பரணியொரு நாண்முழுவ தும்
பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
பகரக்கொ டிக்கட்டி னேன்
சீதஞ்செ யுந்திங்கண் மரபினான் நீடுபுகழ்
செய்யதிரு மலைரா யன்முன்
சீறுமா றென்றுமிகு தாறுமா றுகள்செய்
திருட்டுக் கவிப் புலவரைக்
காதங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக்
கதுப்பிற் புடைத்து வெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு
கவிகாள மேகம் நானே.”
நமக்கு புரியாத மொழியிலே காளமேகம் பாடி விட்டான் தனது பெருமைகளை...
எந்தெந்த பாடல்களை எவ்வளவு நாழிகைக்குள் தன்னால் பாட முடியும் என பட்டியலிடுகிறான்
செங்கோல் ஆட்சி செயும் திருமலைராயன் முன் எப்படி இந்த செருக்குற்ற கவிகள் நரித்தனம் பண்ணுகிறார்கள் என்பதை தெளிவித்து அவர்கள் கொற்றம் அடக்க வந்த காளமேகம் நான் என பறையறிவிக்கின்றான்.
மன்னன் தனது புலவர்களை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் கவிதை போட்டி நடத்துகிறான். அதிலும் வென்ற போதும் காளமேகத்தை மதிக்க மன்னன் தயாரில்லை….
காளமேகம் மனம் நொடிந்து போகிறது ….
"கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்."
கொலைகாரர்கள் ஊர், கோள் , வஞ்சகம் செய்வோர் ஊர், கட்டுப்பாடற்ற காளைகளை போல திரிவோர் ஊர் , இங்கு மண் மழை பெய்து மாரி பொய்க்கட்டும் என வசைமாரி பொழிந்தான்
செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
அய்யா வரனே அரைநொடியில் - வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
மண்மாரி யாலழிய வாட்டு
கவிஞனின் நெஞ்சிலிருந்து வந்த அக்னி அந்த நாட்டின் வளத்தை அழித்ததுதிருமலைராயன் பட்டினம் இன்று மண்மேடாக காட்சி தருகிறது
இறைவனுக்கு தமிழ் தெரியாதா?? சமஸ்கிருதம் தான் தெரியுமா என்று கேலி பேசும் இன்றைய 'தமிழ் அறிஞர்களுக்கு' காளமேகத்தின் இந்த தமிழ் புரியுமா???
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
கூகை ஆந்தை. இரவில் ஆந்தையும் பகலில் காகமும் வென்று விடும். மன்னனும் (கோ) பகைவனை வெல்வதற்கு கொக்கை போல் காத்திருக்க வேண்டும். கால மில்லா காலத்தில் பகையை எதிர்த்தால் மன்னன் தன்னை காக்க முடியாது.
தமிழின் நுணுக்கங்களை சிலேடையாக வெளிப்படுத்தியவன் காளமேகம்...
கவியரசருக்கு பலநேரங்களில் கைகொடுத்தவன் காளமேகம்
No comments:
Post a Comment