Saturday, 5 June 2021

ததிபாண்டன்

 

ததிபாண்டன்


கண்ணன் சிறு குழந்தை…..
அன்றும் இன்றும் என்றும் அவன் நமக்குக் குழந்தையே.
என் கண்ணனை நான் கைகளில் தூக்கி விளையாடுவேன்:
அவனின் சேட்டைகள்… முகத்தில் கோபமும் உள்ளத்தில் உவகையுமாய் கண்ணாமூச்சி ஆட வைக்கிறது:
அடிக்கவும் செய்வேன், அவன் அழுவதை பார்த்து அணைக்கவும் செய்வேன்:
ஆகா என்ன ஆனந்தம்…. அந்த பிரபஞ்சத்தின் தலைவன் என் கைகளில்!!
அவன் என் அடிமை.
அது, அன்றும் இன்றும் என்றென்றும், அப்படித்தான்!!.


அன்று…..
கோகுலத்தில் குட்டி கண்ணன் வழக்கம் போல் வெண்ணைத் திருட , யசோதை, அதைக் கண்டு கண்ணனைத் துரத்த...
கையினில் தாம்புக்கயிறோடு யசோதை ...
உலகளந்த மாயன் சிறுகுழந்தையாய் முன் ஓட..
அவன் அருள் வேண்டி ஓடும் பக்தனாய் யசோதை பின்னோட...
தெருவெல்லாம் கழிநடனம் செய்தபடி ஓடுகிறான் என் குழந்தை..
உலகத்தைப் படைத்தவனே உலகத்தில் ஓடி ஒழிய இடம் தேடும் அதிசயம்!!


அவன் கண்ணில் விழுந்தது ததிபாண்டன் வீடு. அவனுக்கும் வீடு பேறு வேண்டுமல்லவா!.
ஓடி உட்புகுந்த கண்ணன், கண்ணில் பட்டது பெரிய காலி வெண்ணைப் பாண்டம்.
அணுவிற்குள் அணுவாகியவன் பாண்டத்தில் நுழைந்து ஒளிந்துக் கொள்கிறான்.
ததிபாண்டன் கண்டுகொண்டான் --- வந்தது யாரென்று கண்டுகொண்டான் !
திரும்பினால்...அங்கு, தாம்புக்கயிறோடு வருவது யார், ஓ ! யசோதை!!


தனக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியவன் தன்னிடமே அடைக்கலமாக... ஆகா, என்ன பேறு பெற்றனன்!!
பானையின் மூடியினை எடுத்தான்.. பானையை மூடி அதன் மேல் அமர்ந்து கொண்டான்.
"கண்ணன் இங்கு வந்தனன்??" மேலும் கீழும் மூச்சிரைக்க யசோதை.
"இல்லையம்மா இங்கு அவன் வரவில்லை" ... அப்பாவியாகத் ததிபாண்டன்.
முதியவர் ததிபாண்டன் கூறுவது நம்பகமானதே என்று யசோதை திரும்பினாள், //இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி//


நேரம் ஆயிற்று ... யசோதை போயாயிற்று... தன்னை தன்னுள்ளே அடக்கிக் கொண்ட நீலவர்ணன் பானையின் மூடியை தள்ளிப் பார்த்தான்.
மாயன், பாவம் இப்பொழுது குழந்தையாயிற்றே... மூடி அசையவில்லை.
பானையை மூடியவன் அதன்மேல் அமர்ந்தே உள்ளான், அசையவில்லை... என்னசெய்வது.
''ததி, சற்று எழுவாயா? நான் வெளிவரவேண்டும்''
"எழுகிறேன் ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு வாக்கு வேண்டும்" .. இப்பொழுது பிணையக் கைதி கண்ணனாயிற்றே...
"என்ன வேண்டும் கேள்"..
"எனக்கு சுவர்க்கம் வேண்டும்"
"என்ன ததி, நானோ சிறுபிள்ளை, நானெப்படி உனக்கு சுவர்க்கம் கொடுப்பது"
"கண்ணா விளையாடாதே, நீ யாரென்று நான் அறிவேன், நீ எனக்கு வாக்களித்தே தீரவேண்டும்."
பக்தனின் முன் பகவான் அடிமையல்லவா... "சரி, சரி, முதலில் என்னை விடுவி, பின்னர் பார்த்துக்கொள்ளலாம்"
"நீ கண்ணனல்ல, கள்ளன் என்பதை நானறிவேன்.. வரத்தை கொடுத்தாலே உனக்கு விடுதலை"
“சரி சரி ஒத்துக்கொள்கிறேன் திறந்து விடு”
"ஆனால் இன்னும் ஒரு நிபந்தனை, இந்த பானை என்னோடே வாழ்வது, உன்னையும் இப்பொழுது தீண்டிவிட்டது.. ஆகவே அதற்க்கும் சுவர்க்கம் வேண்டும்"
“என்ன ததி தாத்தா , எப்படி பானைக்கு???”
“என்ன கண்ணா, அதுவும் உன் படைப்புதானே. வேண்டும் என்றால் ஒத்துக்கொள்.. இல்லை நான் இப்படியே அமர்ந்துகொள்கிறேன்”


தொண்டர்களுக்கு அடிமை அல்லவா இறைவன்.. அடிமைக்கு ஏது தனிசிந்தனை. தொண்டனின் சிந்தனையே இறைவனின் சிந்தனை.. //இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்//
"தந்தேன் சுவர்க்கம் உனக்கும், உன் பானைக்கும்"


பானைக்கே சுவர்க்கமென்றால் நமக்கில்லையா……………..
வாருங்கள் நாமும் சுவர்க்கம் செல்வோம்.. ததி பாண்டனையும் அவன் பானையையும் அங்கு பார்க்கலாம்.

No comments:

Post a Comment