தனிமை
பிறக்கும் முன் கருவறையில்
கும்மிருட்டுத் தனிமை!
பிறந்தவுடன் கண் மூடி
நல்லுறக்கத் தனிமை!
கூடிக் களித்தாலும்
மகுடம் ஏற தனிமை!
தோற்று துவண்டு விட்டால்
நண்பரில்லை தனிமை...........
மணநாள் கண்டாலும்
மன அறையில் தனிமை!
உறவுகள் தொடர்ந்தாலும்
உள் மனதில் தனிமை!
ஊர் புகழ வாழ்ந்தாலும்
புகழ் மலையில் தனிமை!
பிறர் இகழ வாழ்ந்தாலோ
புற உலகில் தனிமை........
செல்வம் கொழித்தாலோ
உற்றார் முன் தனிமை!
வறுமை எனை வாட்ட
உலகிருந்தும் தனிமை!
தனிமை தனிமை அது
வாழ்வில் ஒரு அங்கம் ..
எவ்வுயிர்க்கும் கூடவரும்
நிழலுருவாய் தனிமை.
தனியாக பிறந்திருந்து
தனியாக வாழ்ந்து
தனியாக நடையிழந்து
ஊரெங்கும் தேடி
துணையாக ஒரு மனதை
காணாது வாடி
தனியாக போகின்றேன்
பிணவறையை நாடி....
பிணமாக மாற
அட....
'என்'னோடு உறவுகொண்ட
உடம்பதுவும் இல்லை....
உடம்பை விட்டு மீண்டும்
தனியாக போகின்றேன்
தனியான நெடும்பயணம்....
'நானு'ம் தனிமை
என் ஊனோ பாவம்..
அசைவில்லா
கொடும் தனிமை!!!.
No comments:
Post a Comment